திருகோணமலையில் ஆட்டோ – மோட்டார் சைக்கிள் மோதல்: இருவர் படுகாயம்!
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அருகாமையில் இன்று(20) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
இன்று அதிகாலை பேக்கரி உற்பத்திப் பொருட்களை ஏற்றிக்கொண்டு காலை நேர வியாபாரத்திற்காகச் சென்றுகொண்டிருந்த ஆட்டோ ஒன்றும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த திருகோணமலை போக்குவரத்துப் பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பேக்கரி ஆட்டோ அதிகாலை வேளையில் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
(கியாஸ் ஷாபி)







