வல்லை பாலத்திற்கு அருகில் கார் விபத்து – காரில் பயணித்த மகளின் கால் முறிவு
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்தனர்.
அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பாலத்தினுள் தடம் புரண்டு விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் பயணித்த நிலையில் மகளின் கால்கள் முறிவடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.








