கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினரால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது பாரிய அளவிலான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, இலங்கைக்குச் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 12,000 வெளிநாட்டுச் சிகரெட்டுகள் மற்றும் 23,800 வெளிநாட்டுப் பீடிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக மதுகம பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கட்டுநாயக்க பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.




