10,000 கி.மீ. கடந்து பிரான்ஸிலிருந்து சைக்கிளில் இலங்கை வந்த நல்லூர் இளைஞர்!
பிரான்ஸ் நாட்டில் இருந்து பல்வேறு நாடுகளுக்குத் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து, சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்து, சூரன் என்ற 28 வயதுடைய இளைஞன் நேற்றைய தினம் புதன்கிழமை (ஒக்டோபர் 22) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட இந்த இளைஞன், இலங்கையின் மகத்துவத்தையும், யாழ்ப்பாணத்தின் கலாசார முக்கியத்துவத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்தப் பயணத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
சவாலான பயண விபரங்கள்:
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சூரன், தனது பயணம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
“நான் பாரிஸில் இருந்து கடந்த செப்டம்பர் 01ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்தேன்.
பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல நாடுகள் வழியாகச் சைக்கிளில் பயணித்து, எனது இறுதி இலக்கான பூர்வீக இடமான நல்லூரை வந்தடைந்தேன்.”
பயணத்தின் நோக்கம்:
சூரனின் பெற்றோரின் சொந்த ஊர் யாழ்ப்பாணம் என்பதால், தனது பயணத்தின் இறுதி இலக்காக நல்லூர் கோயிலைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறினார்.
“இலங்கை ஒரு நாடு மட்டுமல்ல, என் பூர்வீகத்துடன் தொடர்புபட்ட உன்னத உணர்வு. எனது நோக்கம் குடும்பத்துடன் இணைவது மட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தின் கலாசார முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதுதான். யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்துடன் வலுவான உணர்வு மற்றும் கலாசார உறவுகளைப் பேணும் உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தை ஊக்குவிப்பதற்கும் இது ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை உருவாக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையை அடைந்த விதம்:
பாகிஸ்தானுக்குச் சென்று வர முயற்சித்தும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து இந்தியா சென்று நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறையை வந்தடைந்தே தனது இறுதி இலக்கான நல்லூரை வந்தடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தனது பயணத்தில் கரடுமுரடான சவால்களை எதிர்கொண்டாலும், தான் சென்ற நாடுகளின் அரசுகளும் மக்களும் தனக்கு மிகுந்த வரவேற்பையும் ஒத்துழைப்புகளையும் வழங்கியதற்காக அவர் நன்றியைத் தெரிவித்தார்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் பெற்றோர் பிரான்சில் குடியேறிய நிலையில், 28 வயதான சூரன் தனது உணர்வுகளைச் சரளமாகத் தமிழில் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.









