இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண்: எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை வழங்கிய பெண் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (ஒக்டோபர் 19) உத்தரவிட்டுள்ளது.
மதுகம, வெலிபென்னவைச் சேர்ந்த 52 வயதுடைய குறித்த வீட்டு உரிமையாளரான பெண், இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்தமை தெரியவந்ததையடுத்து அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அந்தப் பெண், நீதிமன்றத்தின் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த பெண்ணை எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
சமீபத்தில் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட அறுவரையும் மேலும் 90 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரணை செய்ய எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





