மூத்த நடிகை மனோரமாவின் மகன், நடிகர் பூபதி காலமானார்!
தமிழ் சினிமாவின் மூத்த நடிகை மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி, உடல்நலக்குறைவால் இன்று வியாழக்கிழமை (ஒக்டோபர் 23) காலமானார். அவருக்கு வயது 70.
மகேந்திரன் இயக்கத்தில், 1979ஆம் ஆண்டு வெளியான ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தில் விஜயனின் தம்பியாக நடித்து பூபதி திரையுலகிற்கு அறிமுகமானார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, விசு இயக்கிய ‘மணல் கயிறு’, ‘குடும்பம் ஒரு கதம்பம்’, ‘ராணித் தேனீ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.
நாயகன், வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்கள் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பூபதியால், மாறிவந்த திரையுலகில் தனக்கான இடத்தை நிரந்தரமாகத் தக்கவைக்க முடியவில்லை.
மறைவு:
மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மருத்துவர்களின் அறிவுரைப்படி சென்னை, தி.நகர் நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், தனது தாய் மனோரமா பயன்படுத்திய கட்டிலிலேயே இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
பூபதியின் உடலுக்குத் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்கு நாளை வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 24) மதியம் 3 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.





