தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுடனான கலந்துரையாடல்!
பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (24.10.2024) நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தலானது நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டதுடன், தபால் மூல வாக்களிப்பானது, மாவட்டச் செயலகம், பொலிஸ் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் ஆகியவற்றில் கடமையாற்றுபவர்களுக்கு எதிர்வரும் 30 ஆம் திகதியும் மற்றும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாகவும், பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற அரச நிறுவனங்களுகளில் கடமையாற்றுபவர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 01 ஆம் திகதியும் மற்றும் 04 ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாகவும், மேற்குறித்த திகதிகளில் வாக்களிக்கத் தவறியவர்கள் மீள வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் மாவட்டச் செயலகத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 07 ஆம் திகதியும் மற்றும் 08 ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இவ் தபால் மூல வாக்களிப்புக் கடமைக்காக நியமிக்கப்பட்ட அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் தபால் மூல வாக்களிப்பினை ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்கள் போலவே செயற்பட்டு, இட ஒழுங்கமைப்பு, முகவர்களுக்குரிய ஏற்பாடுகள் போன்றவற்றை முறையாக நடைமுறைப்படுத்தி ஒத்துழைப்பு நல்குமாறு தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களின்
கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் திணைக்களத் தலைவர்கள், திணைக்களத் தலைவர்களால் நியமிக்கப்பட்ட சிரேஷ்ட அலுவலர்கள் அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்