தையிட்டியில் ட்ரோன் கண்காணிப்பு: போராட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தல்!
யாழ் தையிட்டியில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அச்சுறுத்தும் வகையில், பாதுகாப்புத் தரப்பினர் ட்ரோன் கமராக்களைப் பயன்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்களைப் புகைப்படம் எடுத்தல், வாகன இலக்கங்களைச் சேகரித்தல் மற்றும் ட்ரோன் கமராக்கள் மூலம் மேலிருந்து கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்களை அச்சுறுத்த முயற்சிப்பதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“களவெடுத்த பொருளுக்குக் காவல் காப்பது போல, சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்குக் காவல்துறை பாதுகாப்பு வழங்குகிறது” என மக்கள் ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய அச்சுறுத்தல்கள் இல்லையெனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருப்பார்கள் எனவும், எமது பூர்வீகக் காணி விடுவிக்கப்படும் வரை இந்தப் போராட்டம் ஓயாது எனவும் களத்தில் உள்ள மக்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.





