பாரசீக வளைகுடாவில் இரண்டு கிரேக்க எண்ணெய்க் கப்பல்களை ஈரானியப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இவ்வாரத் தொடக்கத்தில், ஈரானிய எண்ணெய்க் கப்பலொன்றைக் கைப்பற்றிய கிரீஸ் அதனை அமெரிக்காவிற்கு அனுப்ப உதவியது.
ஈரான் மீதான அமெரிக்காவின் தடைகளைக் கப்பல் மீறியதால் அதைக் கைப்பற்றியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.
அதைக் கண்டிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்தது.
இந்த நிலையிலேயே இரண்டு கப்பல்களையும் ஈரான் கைப்பற்றியுள்ளது. இந்த நடவடிக்கை கிரீஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு எதிரான பதில் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
ஈரான் கைப்பற்றிய இரு கிரேக்கக் கப்பல்களும் விதிமீறல் செய்ததாக ஈரானின் புரட்சிகர காவல் படையினர் தெரிவித்தனர்.
இரு கிரேக்கக் கப்பல்களும் ஈராக்கிலுள்ள பாஸ்ரா துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றிச் சென்ற கொண்டிருந்தன.
அவற்றில் ஒன்று அமெரிக்காவிற்கு எண்ணெய் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
ஈரானின் இந்த நடவடிக்கை தொடர்பாக, ஏதென்சில் உள்ள ஈரானியத் தூதரிடம் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கிரீஸ் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
கிரேக்கக் கப்பல்களைக் கைப்பற்றியது கடற்கொள்ளைச் சம்பவத்திற்கு சமம் என்றும் கிரீஸ் கூறியுள்ளது.