யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலைய பயணிகளது நலன்கள் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு, கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா, துறைசார் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அதற்காக, யாழ்ப்பாண மத்திய பஸ் நிலைய வளாகத்துக்குள் பொலிஸ் காவலரண் அமைத்தல் தொடர்பில் அதிகாரிகளுடன் அவர் ஆராய்ந்துள்ளார்.
அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் யாழ்ப்பாண மாநகர சபை உத்தியோகத்தர்கள், இ.போ.ச அதிகாரிகள், பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் கலந்துரையாடினார்.
காவலரணை அமைப்பதற்கான இடவசதி உள்ளிட்ட விடயங்களை பொலிஸாருக்கு ஏற்படுத்தி கொடுக்குவாறு, இ.போ.ச அதிகாதிகளுக்கு அமைச்சரால் இதன்போது அறிவுறுத்தப்பட்டது .
அத்துடன், பஸ் நிலைய வளாகத்தில் உள்ள வியாபார கடைகளால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகதியங்களை கருத்தில் கொண்டு, அக்கடைகளை அகற்றுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் பணிக்கப்பட்டது.
மேலும், பஸ் நிலைய வளாகத்தின் தூய்மை தொடர்பில் அதிக அக்கறை செலுத்தி, பயணிகளின் சுகாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் இ.போ.ச அதிகாரிகளுக்கு அமைச்சரால் வலியுறுத்தப்பட்டதுடன், குறித்த நடவடிக்கைகளை அடுத்த 10 நாள்களுக்குள் எடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், சாரதி மற்றும் நடத்துனருக்கான ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் குறித்த கலந்துரையாடலின்போது அவதானம் செலுத்தப்படது.
மேற்படி கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு நேற்று (03) பிற்பகல் அமைச்சர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.