கிளிநொச்சியில் ‘கிளி முயற்சியாளர் – 2025’ உள்ளூர் உற்பத்திகள் விற்பனைக் கண்காட்சி ஆரம்பம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூர்ச் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘கிளி முயற்சியாளர் – 2025’ விற்பனைக் கண்காட்சி இன்று (ஒக்டோபர் 17) ஆரம்பமானது.
சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தி, அவர்களுக்கான புதிய சந்தை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியானது இன்றும் (17), நாளையும் (18) கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள கிளி முயற்சியாளர் சந்தையில் நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் பதில் உதவிப் பணிப்பாளர் ச.சசீபன் அவர்களின் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில், கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அத்துடன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் சிறப்பு விருந்தினராகவும், மேலதிக அரச அதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரச அதிபர் (காணி) அஜிதா பிரதீபன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இந்த விற்பனைக் கண்காட்சியில் உணவுப் பொருட்கள், ஆடைகள், பனைசார் பொருட்கள், தோற்பொருட்கள், விவசாய உற்பத்திகள், கைவினைப் பொருட்கள் மற்றும் அழகுக் கலைச் சேவைகள் உட்படப் பல்வேறு வகையான உற்பத்திகளைச் செய்யும் தொழில்முயற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன், இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு, உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்துவதுடன், தரமான உள்ளூர் உற்பத்திகளை மக்கள் கொள்வனவு செய்து பயனடையுமாறு கிளிநொச்சி மாவட்ட செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
இலவசமாக வழங்கப்பட்டுள்ள கிளி முயற்சியாளர் சந்தையில், சிறு தொழில் முயற்சியாளர்கள் தமது பொருட்களைத் தினமும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.





