நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னுரிமை அளிக்கத் தயார்: பிமல் ரத்நாயக்க அதிரடி!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் எவ்வித தயக்கமும் காட்டாது எனச் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு (Standing Orders) இணங்க, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு உரிய முன்னுரிமை வழங்கி விவாதத்தை நடத்த அரசு தயாராக உள்ளது.
அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கான விவாதங்களைத் தீர்மானிக்கும் “நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம்” ஏன் தாமதமாகிறது என எதிர்க்கட்சியின் முதற்கோலாளர் கயந்த கருணாதிலக்க எழுப்பிய கேள்விக்கு சபை முதல்வர் பதிலளித்தார்.
இரண்டு முக்கிய சட்டமூலங்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புகளுக்காக அரசு காத்திருப்பதாகவும், அதனாலேயே கூட்டத்தை நடத்துவதில் சிறிய தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.
விவாதங்களுக்குத் தயாராவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என கயந்த கருணாதிலக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
அடுத்த அமர்வு வாரத்திற்கான விவாதங்கள் மற்றும் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த இறுதி முடிவுகளை எடுப்பதற்கான விவகாரக் குழுக் கூட்டம் விரைவில் கூடும் எனச் சபை முதல்வர் உறுதியளித்தார்.





