மரணச் சடங்குக்குச் சென்று திரும்பிய வவுனியா ஆசிரியர்களுக்கு நேர்ந்த கதி
மரணச் சடங்கு ஒன்றில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்கள் பயணித்த கார், பதவியா – ஹெப்பட்டிப்பொலாவ பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் ஓர் ஆசிரியர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (ஒக்டோபர் 18) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
பதவியா பகுதியில் இடம்பெற்ற மரணச் சடங்கில் கலந்துகொண்டு காரில் திரும்பிய ஆசிரியர்கள், பதவியா – ஹெப்பட்டிப்பொல வீதியில் உள்ள மகாநெட்டியாவ பகுதியில் பயணித்தபோது, எதிரே வந்த பிக்கப் ரக வாகனம் ஒன்றுடன் இவர்களது கார் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணித்த, வவுனியா மடுக்கந்த ஸ்ரீ தம்மரத்ன வித்தியாதன பிரிவேனாவின் ஆசிரியர் சஞ்சீவா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





