அனர்த்தத்தினால் மக்களை விட எதிர்க்கட்சியினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்! – அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!
“ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் மக்களை விட எதிர்க்கட்சியினரே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் இக்கட்டான நிலையில் இருக்கும் போது, களத்தில் இறங்கி உதவுவதற்குப் பதிலாகச் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்வதைத் தவிர்த்து, மக்களுக்காகச் சேவை செய்ய முன்வாருங்கள்” எனப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 11, 2025) கொத்மலை பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் சேதமடைந்த வீதிகளை நேரில் சென்று பார்வையிட்ட போதே அமைச்சர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நாவலப்பிட்டி – கம்பளை பிரதான வீதி மண்சரிவினால் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இதனால் புகையிரதப் பாதையின் சுமார் 200 மீற்றர் தூரம் பாதிக்கப்பட்டுள்ளது.
புகையிரதப் பாதையைச் சீர்செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வீதி இன்னும் மூன்று தினங்களில் போக்குவரத்துக்காகத் திறக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். தற்போது வீதிச் சேதத்தினால் மக்கள் சுமார் 750 மீற்றர் தூரம் நடந்து சென்றே பேருந்துகளைப் பிடிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
“கடந்த 25 முதல் 50 ஆண்டுகளாக மக்கள் தவறான முறையில் வழிநடத்தப்பட்டுள்ளனர். ஆறுகள் மற்றும் கால்வாய்களை மறித்து நிர்மாணங்களை மேற்கொண்டால் பாரிய நட்டஈடுகளைச் செலுத்த வேண்டியேற்படும். எனவே, இனிவரும் காலங்களில் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்வதே எமது முக்கிய நோக்கம்” என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.





