கழிவுப்பொருட்களுடன் சென்ற டிப்பர் லொறி கால்வாயில் கவிழ்ந்த கோரம்: சாரதி பலி
இரத்தினபுரி – ரத்தனபிட்டிய, சூரிய மல் மாவத்தையில் கழிவுப்பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியொன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ, திவுலபிட்டிய, சூரிய மல் மாவத்தையைச் சேர்ந்த 51 வயதான கே. டட்லி ஆனந்த ஆவார்.
உயிரிழந்த நபர் பழைய கட்டிடங்களை இடிப்பது உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். நுகேகொட கம்சபா சந்தி பகுதியில் இடிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளை ஏற்றியே இவர் டிப்பர் லொறியை வேலை முற்றத்திற்கு கொண்டு வந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று அதிகாலை வேலை முற்றத்தில் இருந்து டிப்பர் லொறியை பின்னோக்கிச் (Reverse) செலுத்தும் போது, திடீரெனக் கவிழ்ந்து அருகில் உள்ள கால்வாயில் விழுந்ததால் இந்த துயர விபத்து நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பொரலஸ்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





