முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிக்கிய வெங்கணாந்திப் பாம்பு!
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மந்துவில் பகுதியில் உள்ள தோட்டக்காணியில், வெங்கணாந்திப் பாம்பு (Python) ஒன்று எதனையோ விழுங்கிய நிலையில் அசைய முடியாமல் இருந்ததை அடுத்து, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நேற்று புதன்கிழமை (ஒக்டோபர் 22, 2025) அதனைக் கைப்பற்றியுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள தோட்டக்காணியினை அதன் உரிமையாளர் துப்புரவு செய்து கொண்டிருந்தபோது, பாம்பு ஒன்று ஏதோ ஒரு உயிரினத்தை விழுங்கியதால் அசைய முடியாமல் தடுமாறிக் கிடப்பதைப் பார்த்துள்ளார்.
இதனை அவதானித்த உரிமையாளர் உடனடியாக முல்லைத்தீவு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாம்பினைப் பாதுகாப்பாக மீட்டு, வேறு பகுதியில் விடுவித்துள்ளனர்.
தற்போது மழைகாலம் நிலவி வருவதால் பாம்புகள் அடிக்கடி வெளிப்புறப் பகுதிகளுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





