பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் வவுனியா – பம்பைமடு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் (36 வயது) தாயொருவரே கடந்த திங்கட்கிழமை குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
அவரின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் கேள்வி எழுப்பியபோது தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த குறித்த தாய் தொடர்பில் சந்தேகம் கொண்ட ஒருவர் கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் பொலிஸாரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டது.
அதன்போதே குறித்த தாய் தான் பெற்ற குழந்தையை தான் வசிக்கும் காணியில் குழிதோண்டி புதைத்தமை விசாரணையின் மூலம் தெரியவந்தது.
ஆயினும் அக் குழந்தையை தான் பிரசவிக்கவில்லை என குறித்த அந்த தாய் கூறியுள்ளார்.
அதனையடுத்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்தபோது அவரே குழந்தையை பிரசவித்துள்ளமை தெளிவாகியுள்ளது.
இதனடிப்படையில் சந்தேகத்தின்பேரில் குறித்த தாயை கைது செய்துள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த தாய் கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து தனியாக வாழ்கின்றமையும் குறிப்பிடத்தக்க வொன்றாகும்.