நடிகர் தனுஷ் தன் மனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
அண்மையில் இசையமைப்பாளர் இமான், நாகசைதன்யா – சமந்தா, ஆகியோர் விவாகரத்தை அறிவித்தனர். இந் நிலையில் தனுஷும் தனது மனைவியை பிரியப் போவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004 ம் ஆண்டு திருமணம் செய்து, இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர்.
கோலிவுட், பொலிவுட், ஹொலிவூட் என பல படங்களில் நடித்து வரும் தனுஷ், அண்மையில் கர்ணன் படத்திற்காக தேசிய விருது பெற்றார். அத்துடன் ஐஸ்வர்யா அவர்கள் பல படங்களை இயக்கி வருகிறார்.
தனுஷ் தற்போது தனது போயஸ் கார்டனில் மிக பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். விரைவில் இந்த வீட்டிற்கு கிரஹபிரவேசம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக தனது மனைவியை பிரிய உள்ளதாக தனுஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
18 ஆண்டுகளாக இருவரும் பந்தத்தில் இருந்தோம். இந்த பயணம் விட்டுக்கொடுத்தல், புரிதல், ஏற்றுக்கொள்ளல் என வளர்ந்தது என தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இன்று இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். ஐஸ்வர்யாவும் நானும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.
ஆகவே எங்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் முதல் திருமணமும் தோல்வி அடைந்து, இதே பிரச்சனைகளை அவரும் சந்தித்திருந்தார்.
முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற செளந்தர்யாவிற்கு சமீபத்தில் வசீகரனுடன் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.