13 ஆம் திருத்தம் தொடர்பிலான அனுரவின் வாக்குறுதி சாத்தியமற்றது: அடித்துக்கூறும் நாமல்!
13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்ற பொய் வாக்குறுதிகளைத் தாம் வழங்க விரும்பவில்லை எனவும், அது நடக்காத காரியம் எனவும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறியே ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “இந்த அதிகாரங்களைக் கொடுத்தால் தென்னிலங்கையில் அடிவாங்க வேண்டும். கொடுக்காவிட்டால் வடக்கில் அடிவாங்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது,” என்று நிலைமையை விவரித்தார்.
நாங்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையாக இருந்து உண்மையை கூற வேண்டும். இந்த நாட்டின் வரலாற்றில் அனைத்து தலைவர்களும் தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றியுள்ளனர்.”
தமிழ் மக்கள் கலாசாரத்தில் பின்னிப் பிணைந்தவர்கள் என்றும், தமிழ் – சிங்களக் கலாச்சாரங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். கதிர்காமம் மற்றும் சிவனொளிபாத மலையில் இரு இனங்களும் ஒன்றாக இணைய முடியும் என்றால், அரசியல் பிரச்சினைக்கும் தீர்வைக் காண முடியும் என்றார்.
“வடக்கில் பாதையோ அல்லது அனைத்து அபிவிருத்தியும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் உருவாக்கியதாகும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.
தென் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்குக் கிடைக்கும் அதிகாரங்கள் வடக்கிற்கும் வழங்கப்பட வேண்டும். “வடக்கில் அரசியல் ரீதியாகத் தனி நாடு தேவை போன்ற கோரிக்கைகள் இருக்கிறது. அதற்கு எமது ஆட்சியில் தீர்வுகள் உண்டு,” எனவும் நாமல் ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்தார்.





