செவ்வந்தியின் தொலைபேசியைப் பரிசோதித்தவர்களிடம் கேளுங்கள் – நாமல் நகைச்சுவை பதில்!
குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைதான விவகாரத்தில், அவரது தொலைபேசியில் தனது பெயர் சேமிக்கப்பட்டிருந்தது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு நகைச்சுவையான பாணியில் பதிலளித்துள்ளார்.
“இஷாரா செவ்வந்தியின் தொலைபேசியில் உங்கள் பெயர் எவ்வாறு ‘சேவ்’ செய்யப்பட்டிருக்கும்?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
“செவ்வந்தியின் தொலைபேசியைப் பார்ப்பதற்குப் பலரும் ஆவலாக உள்ளனர் போல் தான் தெரிகின்றது. செவ்வந்தியின் தொலைபேசியைப் பரிசோதித்தவர்களிடம் தான் அது பற்றி நான் கேட்க வேண்டும்.”
“அவ்வாறானவர்கள் பரிசோதித்து எனது பெயர் எவ்வாறு உள்ளது எனக் கூறினால் நல்லது,” என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“மகே ராஜபக்ச எனப் பெயரொன்று சேவ் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானதே?” என நாமலிடம் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர்:
“சிலருக்குத் தற்போது ராஜபக்சக்கள் தான் கனவில் கூட வருகின்றனர். அந்தக் கட்சியிலும் (என்.பி.பி.) நாமல் ஒருவர் இருக்கின்றார். அது அவரா என்பது கூடத் தெரியவில்லை.”
“நாமல் என்ற பெயரைக் கண்டதுமே அவர்களுக்கு என்னை நினைவுக்கு வருவது சந்தோஷம்.”
“பெண்கள் தமது காதலர்களின் பெயருக்கு முன்னால் தான் எனது என எழுதி சேவ் செய்வார்கள். சிலவேளை அது அப்படி சேவ் செய்யப்பட்ட ஒரு பெயராகக் கூட இருக்கலாம்,” என்று நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.





