பட்டப்பகலில் நடக்கும் படுகொலைகளை நியாயப்படுத்த முடியாது!’ – சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட சுமந்திரன் வலியுறுத்தல்!
பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளைப் ‘பாதாளக் குழு’ எனக் காரணம் காட்டி நியாயப்படுத்த முடியாது எனவும், அரசாங்கம் சட்டம், ஒழுங்கை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கும், பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இது குறித்து அவர் கருத்துரைத்தார்.
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளைத் தாம் வரவேற்கின்றோம்.
“இருப்பினும் அதனைக் காரணமாகக் கூறி, பொது வெளியில் பட்டப்பகலில் இடம்பெறும் படுகொலைகளை நியாயப்படுத்துவதற்கு அரசு முற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.”
மாறாக, சட்டம், ஒழுங்கை உரியவாறு பேண வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கின்றது என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், இந்த வருடத்தில் இதுவரை சுமார் 50 இற்கும் மேற்பட்ட இவ்வாறான கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இனிவரும் காலங்களில் இத்தகைய சட்டவிரோதப் படுகொலைகள் இடம்பெறுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.





