வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நெகிழ்ச்சி: குழந்தை ரூ.1.5 கோடிக்கு ஏலம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பெருந்திருவிழாவில், குழந்தை ஒன்று ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலயத்தில் குழந்தையை விற்று வாங்கும் பாரம்பரியம்
நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் வேண்டுதல் வைத்து, குழந்தை பிறந்ததும் அதனை ஆலயத்தில் விற்று வாங்கும் வழக்கம் நம்மிடையே காலங்காலமாக உள்ளது.
இவ்வாறு குழந்தையை ஆலயத்தில் விற்று வாங்குவதன் மூலம், அக்குழந்தை நோய்நொடியின்றி ஆரோக்கியத்துடனும் சகல சௌபாக்கியங்களுடனும் வாழும் என்பது பக்தர்களின் ஐதீகமாகும்.
குழந்தை தவிர, பழங்கள், பொருட்கள், தென்னை, கமுகு மரங்கள் போன்றவையும் ஆலயத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்படுவதுண்டு.
அந்த வகையில், அண்மையில் நடந்த வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழாவில் இந்தக் குழந்தை ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் சிறப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள விஷ்ணு ஆலயங்களில் பிரசித்தி பெற்று விளங்கும் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் மகோற்சவப் பெருவிழா அண்மையில் நடந்து முடிந்திருந்தது. இந்த ஆலயத்தில் சமுத்திரத் தீர்த்தம் மிகவும் பிரபலமானது.
பெரும்பாலான ஆலய மகோற்சவத் திருவிழாக்களில் ஆலயத்தின் கேணியில் தீர்த்தம் இடம்பெறுவது வழமை.
ஆனால், வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் மட்டுமே கடலுக்குச் சென்று பெருமாள் தீர்த்தமாடுவது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும்.





