EPF பணத்தை இனி ஓய்வூதியமாகப் பெறலாம்! புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்
தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) மீதமுள்ள தொகையை மாதாந்த ஓய்வூதியமாகப் பெறும் புதிய திட்டமொன்று குறித்து அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்தத் திட்டம் ஊழியர்கள் மீது திணிக்கப்படாது. ஊழியர்கள் விரும்பினால் மாத்திரம் தமது EPF நிலுவைத் தொகையை ஓய்வூதியமாக மாற்றிக்கொள்ளலாம்.
பலவிதமான தெரிவுகள்:
- சேமிப்புப் பணத்தை முழுமையாக ஒரே தடவையில் (Lump Sum) பெற்றுக்கொள்ளல்.
- ஒரு பகுதியை மட்டும் பெற்றுக்கொண்டு, மீதியை மாதாந்த ஓய்வூதியமாகப் பெறுதல்.
- முழுத் தொகையையும் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தல்.
ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் மொத்தப் பணத்தையும் முதலீடு செய்து நஷ்டமடைவதைத் தடுக்கவும், வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானத்தை உறுதிப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் அமைச்சின் செயலாளர் இது குறித்துத் தெரிவிக்கையில், “இந்தத் திட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம், இந்த மாத இறுதியில் (ஜனவரி 2026) நடைபெறவுள்ள தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் (National Labour Advisory Council) விவாதிக்கப்பட்டு எடுக்கப்படும்,” எனத் தெரிவித்துள்ளார்.





