கோப்பாய் பொலிஸ் நிலையம் வெளியேற்றம்: யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்துக்கு தற்காலிக மாற்றம்
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையம், நீதிமன்ற உத்தரவின் பேரில் தனியாருக்குச் சொந்தமான காணி மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அப் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வெளியேற்றத்தின் பின்னணி
கோப்பாய் பொலிஸ் நிலையம், இராச பாதை வீதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை அடாத்தாகக் கைப்பற்றி அமைக்கப்பட்டிருந்தது.
தமது காணிகள், வீடுகளைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு, 7 உரிமையாளர்கள் யாழ். மாவட்ட நீதிமன்றில் கடந்த 2019ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தனர்.
சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் முடிவில், கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி, பொலிஸார் அந்தக் காணிகள் மற்றும் வீடுகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பளித்து 2 மாதங்களுக்கு மேலாகியும், பொலிஸார் காணிகளை ஒப்படைக்காத நிலையில், இன்று புதன்கிழமை (அக்டோபர் 15) நீதிமன்றப் பதிவாளரின் முன்னிலையில் பொலிஸார் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, உரிமையாளர்களிடம் காணிகள் கையளிக்கப்பட்டன.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமது காணிகள், வீடுகளை இழந்து வாடகை வீடுகளில் தங்கியிருந்தவர்களுக்கு தற்போது சொந்தக் காணிகள், வீடுகள் கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





