தரம் 5 மாணவன் போதைப்பொருள் கடத்தல்! – ஜனாதிபதி அனுர வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஒரு பிரபல பாடசாலையில் தரம் 5இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன், தனது புத்தகப் பையில் போதைப்பொருளை எடுத்துச் சென்ற அதிர்ச்சிச் செயல் அம்பலமாகியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பேலியகொடையில் உள்ள வித்யலங்கார மகா பிரிவேனாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டபோது ஜனாதிபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.
தரம் 5 மாணவன் பைக்குள் போதைப்பொருளை எடுத்துச் செல்வதை சக மாணவர்கள் அவதானித்து அது தொடர்பில் வெளியே கூறியுள்ளனர். இதனையடுத்து குழந்தையின் பையில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த குழந்தையின் தந்தை போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர். தாய் உயிருடன் இல்லாததால், குழந்தை மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தல் எந்தளவுக்குச் சமூகத்தில் ஊடுருவியுள்ளது என்பதை இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.





