மன்னாரில் கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்
மன்னார் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம், சௌதார், எழுத்தூர், மூர்வீதி உள்ளடங்கலாக பல கிராமங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எழுத்தூர் பகுதியில் உள்ள முப்பது குடும்பங்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக அந்த குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தற்போது எழுத்தூர் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னாரின் பல பாகங்களிலும் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற கிராம மக்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தலைமையிலான குழுவினர் குறித்த பகுதிக்குச் சென்று துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தம் சார்ந்த விடயங்களை உடனடியாக மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம் அல்லது கிராம அலுவலகர்களின் கவனத்திற்கு கொண்டு வருமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.