சீனாவில் பரவும் HMPV வைரஸ் – இந்தியாவிலும் தொற்று பரவல்
2019இல் சீனாவில் ஆரம்பமான கொரோனா வைரசின் பரவல், உலகெங்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது சீனாவில் புதிய HMPV வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இதன் காரணமாக உலக நாடுகள் பல அச்சத்தில் உள்ளன.
எச். எம். பி. வி (HMPV) என அழைக்கப்படும் இந்த வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் முதன்முறையாக மனித மெட்டா நியூமோ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 3 மாத பெண் குழந்தை மற்றும் 8 மாத ஆண் குழந்தைக்கு HMPV வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது.
இந்த குழந்தைகள் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எந்த பயணமும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், குழந்தையின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
HMPV வைரசானது, கொரோனா வைரஸ் போன்ற பல அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இதில் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.
மேலும், சீனாவின் வடக்கு மாகாணங்களில் இந்த வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன, சிறுவர்கள் பலர் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.