ஈரான் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்! – ரியாத் தாக்குதலால் கொதிக்கும் சவுதி அரேபியா!
ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்குத் தமக்கு முழு உரிமை உண்டு என சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் (Faisal bin Farhan) தெரிவித்துள்ளார். ரியாத்தில் உள்ள இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஈரானே காரணம் எனக் குற்றம் சுமத்தியுள்ள அவர், இந்த அத்துமீறலைச் சவுதி ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ரியாத்தில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களிடம் பேசிய இளவரசர் பைசல், “ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; இவ்வாறான தாக்குதல்கள் மூலம் டெஹ்ரான் எவ்வித நன்மையையும் அடையப்போவதில்லை” என எச்சரித்தார். அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விடுத்து, ஈரான் அழுத்தம் கொடுக்க முயற்சிப்பது அரசியல் ரீதியாக அவர்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானைத் தாக்கி வரும் நிலையில், தற்போது சவுதி அரேபியாவும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கத் தயாராகி வருவது பாரசீக வளைகுடாவில் ஒரு மாபெரும் பிராந்தியப் போருக்கான (Regional War) அச்சத்தை உருவாக்கியுள்ளது.




