பண்டிகைக் கால உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடா? இறக்குமதியாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு
எதிர்வரும் சித்திரை புத்தாண்டு மற்றும் பண்டிகைக் காலத்திற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஏற்கனவே இறக்குமதி செய்ய விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கப்பல் போக்குவரத்தில் பாரிய தாமதங்கள் ஏற்படாதவரை, நாட்டில் எவ்வித உணவுப் பற்றாக்குறையும் ஏற்படாது என அவர் உறுதியளித்துள்ளார்.
உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில், மொத்த வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் தேவையற்ற முறையில் பொருட்களைச் சேமித்து வைக்கத் தேவையில்லை என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக கொழும்புக்கு வெளியே உள்ள வியாபாரிகள் பொருட்களைப் பதுக்குவதைத் தவிர்க்குமாறும், நுகர்வோருக்குத் தடையின்றி பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யுமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் உயர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாது என அவர் எச்சரித்துள்ளார். சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் உள்ளூர் சந்தை விலைகளிலும் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





