யாழ். பல்கலைக்கழக பொன் விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, அதன் பொன் விழா கொண்டாட்டங்கள் இன்று பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.
ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் இந்தப் பல்கலைக்கழகம், தனது ஐம்பதாவது ஆண்டைக் கடந்து இன்று பொன்னகவைப் பெருவிழாவைக் காண்கிறது.
பல்கலைக்கழகத்தின் பன்னிரண்டு பீடங்களும் இணைந்து இந்த நிகழ்வை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றன.
காலை 09.00 மணிக்கு ஆரம்பமான பொன் விழாவில், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனிவிரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கே. எல். வசந்தகுமார ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
வெளியீடுகள்:
பல்கலைக்கழகத்தின் ஐம்பது வருடகால கல்விப் பணி வரலாற்றை எடுத்துரைக்கும் “யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்அகவை வரலாறு” எனும் வரலாற்றுப் பொக்கிஷமான நூல் வெளியிடப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் பொன்னகவையை நினைவுகூரும் வகையிலான நினைவு முத்திரை வெளியீடும் நடைபெற்றது.
இந்த அரை நூற்றாண்டுப் பயணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.










