இஷாரா செவ்வந்தியை இந்தியாவுக்குக் கடத்திய படகைச் செலுத்திய யாழ் இளைஞன் அதிரடிக் கைது!
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட படகைச் செலுத்திய பிரதான இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனைக் கொழும்புக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், படகின் உதவியாளராகச் செயற்பட்ட மற்றுமொருவரைத் தேடி விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகைக் கொழும்பு குற்றப் பிரிவு (CCD) கைப்பற்றியுள்ளது.
இந்தப் படகு யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தே காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது, இஷாரா இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவிய முக்கிய சந்தேகநபரான ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான, 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது.
கொழும்பு குற்றப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறைப் பரிசோதகர் கபில காரியவசம் தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆனந்தனிடம் மேற்கொண்ட நீண்ட விசாரணையின் பின்னரே இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 10 பேர் கைது:
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டதன் பின்னர் இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகியிருக்க உதவியமை தொடர்பாக இதுவரையில் 10க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களைக் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் கைது செய்து, தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.





