முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு சிறந்த நாளைய தினத்திற்கான இளமையான மற்றும் ஆரோக்கியமான மனதை உருவாக்குவதற்கான விருப்பமான தெரிவாக சதுரங்க விளையாட்டை இளம் சந்ததியினர் மத்தியில் ஊக்கப்படுத்துவதை தொலைநோக்கக் கொண்டு முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கத்தின் ( Mullaitivu District Chess Association) அங்குரார்ப்பணம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி திரு.எஸ்.தனஞ்செயன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுன் 15 பேர் அடங்கிய நிர்வாகக்குழுவும் தெரிவு செய்யப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட சதுரங்க சங்கம் பின்வரும் குறிக்கோள்களை இலக்காக் கொண்டு பல்வேறு செயற்பாடுகளை 2024 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்த இன்றய அங்குரார்ப்பண நிகழ்வில் தீர்மானிக்கப்பட்டது.
அங்குரார்ப்பண நிகழ்வில் தீர்மானிக்கப்பட்ட விடயம்
- சதுரங்கத்தின் கொள்கைகளையும் அது வாழ்க்கைக்கும் தீர்மானமெடுப்பதற்கும் எவ்வாறு பங்களிக்கும் என்பதை கற்பித்தல்.
- முல்லைத்தீவு மாவட்டத்தில் சதுரங்க விளையாட்டில் ஆர்வத்தை ஊக்குவித்தல் மற்றும் தூண்டுதல்
- சதுரங்கக் கழகங்கள், சங்கங்கள் மற்றும் கல்விக்கூடங்களின் உருவாக்கத்தை ஊக்குவித்தல்.
- முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை ஒழுங்கமைத்தல் அல்லது ஒருங்கிணைத்தல்.
- இலங்கை மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் சதுரங்கப் போட்டிகளில் மாவட்ட வீரர்கள் பங்கேற்பதை எளிதாக்குதல்.
- மதிப்பிடப்பட்ட விளையாட்டுகளில் அவர்களின் செயல்திறன் அடிப்படையில் சதுரங்க வீரர்களை தரப்படுத்துதல்
- மேற்கூறியவற்றை அடைவதற்கு தேவையான அனைத்து நிர்வாக செயல்பாடுகளையும், நிதி திரட்டல் மற்றும் பிற செயல்பாடுகளையும் மேற்கொள்ளுதல்.
இன்று இடம்பெற்ற திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.குணபாலன் , மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.முகுந்தன் முல்லைத்தீவு மாவட்டத்தில் சதுரங்க விளையாட்டில் ஆர்வத்துடன் செயற்படும் அரச உத்தியோகத்தர்கள் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.