இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை தன்வசப்படுத்திய நியூஸிலாந்து!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன் நியூஸிலாந்து அணி மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் 2:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று, தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இந்த தொடர் மற்றும் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி எட்டு ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இன்று (30.12.2024) மவுண்ட் மவுங்கானுயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, களத்தடுப்பை மேற்கொள்வதாக தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்றது. இங்கு, சாப்மன் 42 ஓட்டங்களையும், டிம் ராபின்சன் மற்றும் மிட்செல் ஹே ஆகியோர் தலா 41 ஓட்டங்களை எடுத்தனர்.
பின்னர் இலங்கை அணி 187 ஓட்டம் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடினாலும், 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன் மூலம், நியூஸிலாந்து 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்று டி20 தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
இரு அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டி எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி, நெல்சனில் உள்ள சாக்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.