அரச ஊழியர்கள் இரண்டு வார காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வரவுள்ளது.
அதற்கமைய, அரச அலுவலக பணிகள் மற்றும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை 2 வாரங்களுக்கு இணைய வழியில் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் வரை இரண்டு வார காலம் இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி செயலகம் கூறியுள்ளது.
எனினும், அத்தியாவசிய சேவைகள் வழமைபோல இயங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாட்டில் நிலவும் நெருக்கடிகளால் இவ்வாண்டு கல்வி செயற்பாடுகள் திட்டமிட்ட படி முழுமையாக இடம்பெறாததால், ஓகஸ்ட் மற்றும் டிசம்பரில் வழமையாக வழங்கப்படும் தவணை விடுமுறை இம்முறை வழங்கப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு கல்வி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
உயர்தர பரீட்சைகள் இடம்பெறும் போது மாத்திரம் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.