மணிப்பூர் பற்றி எரியும்போது, பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நகைச்சுவையாகப் பேசுவது கண்டனத்துக்குரியது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் வியாழக்கிழமை உரையாற்றினார்.
இந்த நிலையில், புதுடில்லியில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நகைச்சுவையாகப் பேசியதற்குக் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதன்போது ராகுல் காந்தி மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதைக் கேட்டேன். அவர் நகைச்சுவையாகப் பேசுகிறார். சிரிக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கோஷங்களை எழுப்புகின்றனர். ஒரு பிரதமருக்கு இது அழகல்ல.
மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். நான் கடந்த 19 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். எல்லா மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால், மணிப்பூரில் நாங்கள் பார்த்ததை வேறு எங்கும் பார்க்கவில்லை. அங்கு என்ன நடந்தது என்பதை நான் தற்போது சொல்ல வேண்டும்.
நாங்கள் மேத்தி சமூக மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றபோது, அந்த இடத்திற்கு குகி சமூக மக்களை அழைக்காதீர்கள் என்று எங்களுக்குச் சொல்லப்பட்டது. அங்கு வந்தால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என கூறினார்கள். இதே நிலைதான் குகி மக்கள் வசிக்கும் இடத்திலும் இருந்தது. மணிப்பூர் குகி, மைத்தி என இரண்டாக பிரிந்திருக்கிறது. அது ஒரு மாநிலமாக இல்லை. இதைத்தான் நான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன்.
மணிப்பூரில் நிலைமையையைக் கட்டுப்படுத்த பிரதமர் நினைத்திருந்தால் முடிந்திருக்கும். அதற்கான பல்வேறு கருவிகள் அவரிடம் உள்ளன. ஆனால், பிரதமர் தனது கடமையைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, நாடாளுமன்றத்தில் அவர் சிரித்து சிரித்துப் பேசுகிறார். பிரதமர் மோடி மணிப்பூருக்குச் சென்றிருக்க வேண்டும். அங்குள்ள மக்களோடு பேசி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.