ஜனாதிபதி அநுர – கட்டார் அமீர் அவசரப் பேச்சுவார்த்தை
கட்டார் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்து வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
கட்டார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய ஜனாதிபதி, இந்த இக்கட்டான சூழலில் இலங்கையின் முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் கட்டார் நாட்டிற்கு வழங்கியுள்ளார்.
கட்டாரில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினரின் நலம் குறித்து ஜனாதிபதி இதன்போது விசேடமாகக் கேட்டறிந்தார். அங்குள்ள இலங்கையர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், தங்களது நாட்டில் வசிக்கும் அனைவரது பாதுகாப்பிலும் கட்டார் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அமீர் இதன்போது ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார்.
தற்போதைய இராணுவ மோதல்களால் எரிசக்தித் துறை மற்றும் விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாகக் கலந்துரையாடினர். சவால்கள் இருந்தபோதிலும், இலங்கை போன்ற நாடுகளுக்குத் தேவையான எரிசக்தி விநியோகத்தைத் தடையின்றி வழங்குவதில் கட்டார் உறுதியாக இருக்கும் என அமீர் உறுதியளித்துள்ளார். இராஜதந்திர ரீதியில் இந்தப் பதற்றத்தைத் தணிக்க சர்வதேச ஒத்துழைப்பின் அவசியத்தையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.




