அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அநுர
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பேரிடர் அனர்த்தத்தின்போது, இலங்கையின் தேவைப்படும் நேரத்தில் மீண்டும் தங்களுடன் நின்றமைக்காக அமெரிக்காவிற்கும் ஜனாதிபதிக்கும் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9, 2025) எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.
அமெரிக்காவினால் வழங்கப்பட்ட விரைவான C-130 விமானப் பயன்பாடுகளும் உடனடி $2 மில்லியன் அவசர உதவியும் பாராட்டத்தக்கது என அவர் எக்ஸ் தளத்தில் பதிவினை வெளியிட்டுள்ளார்.
இந்த உதவிகள், பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களில் உறுதியாக வேரூன்றிய இரு நாடுகளுக்கு இடையேயான நீடித்த கூட்டாண்மையின் வலிமையையும், இரு நாட்டு மக்களிடையேயான நெருங்கிய உறவுகளையும் பிரதிபலிக்கின்றன என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் இந்தத் துரித மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்குப் பெரும் பலமாக அமைந்ததாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.





