இவ் வருடத்தின் கடந்த சில மாதங்களில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயின் தாக்கம் குறித்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 24,523 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், மே மாதத்தில் 6,483 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று மாத்திரம் 313 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே டெங்கு நோயாளர்கள் அதிகளவானோர் இனங்காணப்பட்டுள்ளதாகவும், கண்டி, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிளிலும் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.