முல்லைத்தீவு- குருந்தூர் மலை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும், சமூக செயற்பாட்டாளரான மயூரன் ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக காணிகளை, தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளதற்கும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து, தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் நேற்று குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ரவிகரன் மற்றும், மயூரன் ஆகியோர் நேற்று மாலை முல்லைத்தீவு பொலிசாரால், பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்.
இதையடுத்து, பொலிஸ் நிலையம் சென்ற இருவரையும் பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்.