எரிபொருள் மற்றும் உர இறக்குமதி தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்த வார இறுதியில் மொஸ்கோவுக்கு மேற்கொள்ளவிருந்த இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் பயணம், ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மசகு எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள், உரம் மற்றும் நிலக்கரி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இலங்கைக்கு அவசர உதவி தேவைப்படுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை உத்தியோகபூர்வமாக கடன் வசதியை நாடியுள்ளது.
இதுகுறித்துப் பேச்சு நடத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் மொஸ்கோவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் சமன் வீரசிங்க ஆகியோர் அடங்கிய குழு இன்று மொஸ்கோ செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும் இந்தக் குழுவின் பயணமே, ஒருவாரம் தாமதமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரெம்ளினில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளநிகழ்வுகள் காரணமாக, இந்தப் பயணத்தை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்குமாறு இலங்கையிடம் ரஷ்யா கோரியுள்ளது.
இலங்கைக் குழுவின் மொஸ்கோ பயணம் ஒரு வார கால தாமதம் ஏற்பட்டுள்ளதை ரஷ்ய இராஜதந்திர வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.