ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமாக எதுவும் இல்லை: ரோஹித ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச, அனைவரும் நினைப்பது போல் ராஜபக்ச குடும்பம் செல்வந்தர்கள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிலங்கை செய்திதாள் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்தார். அதில், ராஜபக்சர்கள் செல்வந்தர்களா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எல்லோரும் எங்களிடம் எல்லாம் இருக்கிறது என நினைக்கிறார்கள், ஆனால் உண்மையில், எங்களிடம் எதுவும் இல்லை. சொந்தமாக வீடு, கார் என எதுவுமே இல்லை” என்று பதிலளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் சிறுவயது முதல் அரசாங்க சொத்துக்களிலேயே வசித்து வருகிறோம். அரசாங்க வாகனங்களையே பயன்படுத்தி வருகிறோம். இல்லை என்றால், ஒரு நண்பரிடம் இருந்து வாகனத்தை கேட்டுப் பெற்றுக்கொள்வோம்.
உண்மையாக அனைவரும் நினைக்கும் வகையில் ராஜபக்சர்கள் குடும்பம் இல்லை. எனது தந்தை, யாரிடமும் கையேந்தாமல், தாமே சம்பாதித்து வாழ வேண்டும் என எப்போதும் கூறுவார். இதனால், நான் செய்த ஒரே வேலை கற்பித்தல். அதுவும் பணத்திற்காக அல்ல. எனக்கு வேறு எந்த வருமான ஆதாரமும் இல்லை. நானும் ஒரு முனைவர் பட்டம் பெற வேண்டும்” என்றார்.





