தொல்பொருள் பெயர்ப்பலகை அகற்றியோர் விரைவில் கைது! – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு
கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால எச்சரித்துள்ளார்.
இன்றைய தினம் திங்கட்கிழமை (நவம்பர் 24, 2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
“வடக்கு, கிழக்கு, தெற்கு என அனைவருக்கும் ஒரே சட்டம்தான். அதனை எவரும் மீறக்கூடாது.”
சட்டத்தைக் கையிலெடுத்து இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டோர் மீது நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே காவல்துறை விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தின் பின்னணி:
கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் குடும்பிமலை உட்பட்ட மலைப் பிரதேசங்கள், பழமை வாய்ந்த ஆலயங்கள் மற்றும் வயல் வெளிகள் போன்ற இடங்களில் “தொல்லியல் இடம்“ என்ற பெயர்ப்பலகைகள் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்டிருந்தன.
பிரதேச மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சுதாகரன், உபதவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அண்மையில் அந்தப் பெயர்ப்பலகைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





