சீரற்ற காலநிலை காரணமாக 441,590 பேர் பாதிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 24 மாவட்டங்களைச் சேர்ந்த 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 06.00 மணி நிலவரப்படி பல்வேறு அனர்த்த சம்பவங்களினால் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 01 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
12,348 குடும்பங்களைச் சேர்ந்த 38,616 பேர் 437 பாதுகாப்பு முகாம்களிலும், 115,319 பேர் உறவினர்களின் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தெதுரு ஓயாவின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வாரியபொல, நிக்கவெரட்டிய, மாஹோ, கொபேகனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர பிரதேசங்களில் உள்ள மக்கள் வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.
கலா ஓயா, மல்வத்து ஓயா, களனி ஆறு, ஹெடா ஓயா, மஹாவலி ஆறு மற்றும் முந்தேனி ஆறு ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால் பல பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 04.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.
இதன்படி கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில பகுதிகளில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கொழும்பு, கம்பஹா, கேகாலை, குருநாகல், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,183 முப்படை வீரர்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவத்தில் 2080 அதிகாரிகள், இலங்கை கடற்படையினர் 520 பேர், இலங்கை விமானப்படையினர் 540 அதிகாரிகள் மற்றும் 43 காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதகமான காலநிலை காரணமாக உதவி தேவைப்படுவோர் அதன் அவசர தொலைபேசி இலக்கமான 117, 0112 136 222 / 0112 670 002 தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொள்கிறது.
011-2027148, 011-2472757, 011-2430912, 011-2013051, 011-2013051 அல்லது 107 (தமிழ் பேசும் மக்களுக்கு) அல்லது disaster.ops@police.gov.lk என்ற மின்னஞ்சல் வழியாக 24 மணி நேரமும் செயல்படும் காவல்துறை நடவடிக்கை மையத்தை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.






