இராணுவத்தின் உதவியுடன் விரைவாக புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வரும் முல்லைத்தீவு நாயாறு பாலம்
முல்லைத்தீவு – கொக்கிளாய் – திருகோணமலை வீதியில் அமைந்துள்ள பிரதான நாயாறு பாலம், அண்மையில் ஏற்பட்ட டிட்வா புயல் வெள்ள அனர்த்தம் காரணமாக முற்றிலுமாக உடைந்துள்ளதால் அங்கு போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் சேதமடைந்த நாயாறு பாலத்தின் புனரமைப்புப் பணிகள், இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் டிசம்பர் 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாலம் உடைந்துள்ளதன் காரணமாக முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை, மற்றும் கோக்கிளாய் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளதாக முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
பாலம் சீரமைக்கப்படும் வரை, பொதுமக்களின் அத்தியாவசியப் போக்குவரத்துக்காக, இலங்கை கடற்படையினரால் நாயாறு பகுதியில் இலவச படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாலத்தின் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.





