கண்ணீரில் மூழ்கிய கிராமம் – தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று (03) முன்னெடுக்கப்பட்டது.
கடந்த மாதம் 25ம் திகதி கிளினொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், குழந்தை ஒன்று உயிரிழந்தது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த குழந்தையின் தாய், நேற்று முன்தினம் (02) உயிரிழந்தார்.
குறித்த குழந்தையின் இறுதிக் கிரியைகள் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற நிலையில், நேற்றைய தினம் 34 வயதான அந்த குடும்பத் பெண்ணின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது.
பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
இந்த நிலையில், விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பெரும் திரளான மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், மது போதையில் வாகனம் செலுத்துதல், அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுதல் ஆகியவற்றை கட்டுப்படுத்தி, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்குமாறும் வலியுறுத்தினர். மேலும், பாதசாரிக் கடவைகளில் வீதி மின் விளக்குகளை அமைக்குமாறும் மக்கள் கோரின.
சம்பவத்திற்கு எதிரான மக்கள் கோரிக்கைகள்
நகர திட்டமிடலை மீள் பரிசீலனை செய்து, பரந்தன் முதல் முறிகண்டி வரை வீதி விளக்குகளை அமைக்குமாறும், இரட்டைப் பாதைகளை அமைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துமாறும் மக்கள் வலியுறுத்தினர்.
மேலும், பரத்தன் சந்தி, டிப்போ சந்தி, காக்காக்கடை சந்தி, கரடிபோக்கு சந்தி உள்ளிட்ட பகுதிகளில் வீதி மின் விளக்கு அமைப்பதற்கும், போக்குவரத்து பொலிசாரை வீதிக்கடமைகளில் அமர்த்துமாறும் மக்கள் எதிர்மறையான நடவடிக்கைகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குமாறும் வலியுறுத்தினர்.
பொலிஸாருக்கு மகஜர் கையளிப்பு
இது போன்ற சம்பவங்கள் மூலம் அப்பாவி மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்படுவதும், அழகான குடும்பங்கள் அழிந்துவிடுவதையும் தடுக்க பொலிசாரும், சம்மத்தப்பட்ட தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஜனாதிபதி உள்ளிட்ட பலருக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது.
பொலிஸ்மா அதிபருக்கான மகஜர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்த தந்ரீயிடம் கையளிக்கப்பட்டது. அவர், இத்தகைய விஷயங்கள் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 1,000 போதை பரிசோதனை குழாம்களை கொழும்பிலிருந்து எடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், வேக கட்டுப்பாடு, போதையில் வாகனம் செலுத்தல் போன்ற விடயங்களை கட்டுப்படுத்த பொலிசாருக்கு ஆலோசனை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.