நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, வியாழக்கிழமை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில், நேற்று முன்தினம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும், ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஊரடங்குச் சட்டம் நேற்றுக்காலையுடன், நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், இன்று புதன்கிழமை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று மாலையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஊரடங்குச் சட்டம் நாளை வியாழக்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டத்துக்கு மத்தியிலும் ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெறுவதால், ஊரடங்குச் சட்டத்தை நீடிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, திங்கட்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100 இற்கும் அதிகமான வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவங்களில் 230இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
47 வாகனங்கள் மற்றும் 38 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும், 41 வாகனங்கள் மற்றும் 65 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அழிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் வீடுகளில் பெரும்பாலானவை ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது.