வயல்வெளியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சாரதி பலி!
வவுணதீவுப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை வயல் பிரதேசத்தில் உழவு இயந்திரம் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி உயிரிழந்துள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 51 வயதுடையவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த உழவு இயந்திர சாரதி, நேற்றுத் திங்கட்கிழமை (ஒக்டோபர் 20) வீட்டில் இருந்து பழங்குடியிருப்பு மடு பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றை உழுவதற்காக உழவு இயந்திரத்துடன் சென்றுள்ளார். இரவாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், அவரது உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 21) காலையில் அவரைத் தேடி வயலுக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, உழவு இயந்திரம் குடைசாய்ந்த நிலையிலும், சாரதி சடலமாகக் கிடப்பதையும் கண்டு, உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்துச் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





