கொழும்பு பகுதியில் உள்ள பொரள்ளை தேவாலயத்தில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீ ஏற்படும் போது வெடிக்கும் வகையில் இக் கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறியுள்ளார்.
அத்துடன் கைக்குண்டை தேவாலயத்திற்குள் வைப்பதற்காக 13 வயது சிறுவன் பயன்படுத்தப்பட்டமையும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுமார் 16 வருட காலமாக, குறித்த தேவாலயத்திற்கு வருகின்ற நபர் ஆவார், கடந்த ஒன்பது மாதங்களாக குறித்த தேவாலயத்திலேயே நிரந்தரமாக அவர் தங்கியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இக் கைக்குண்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சிலவும், பாதுகாப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
13 வயது சிறுவனே கைக்குண்டை வைத்ததாக கூறி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர், புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரள்ளை பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.