மானிப்பாயில் வாகனங்களுக்கு தீ வைத்த முகமூடி கும்பல்
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், இன்று (அக்டோபர் 13) அதிகாலை வேளையில் முகமூடி அணிந்த நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று தனியார் வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இந்தக் கும்பல், முதலில் வீடொன்றின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளது.
அதன் பின்னர், அதே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் அங்கிருந்து கொண்டு சென்றுள்ளனர்.
சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லாகம் வீதியில் மாசியப்பிட்டி சந்தியில், அந்த மோட்டார் சைக்கிளை வீதியின் நடுவில் நிறுத்தித் தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





