2029-ல் நாமல் ராஜபக்ச தான் அடுத்த ஜனாதிபதி! – அடித்துக் கூறும் அர்ச்சுனா எம்.பி
தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி அலைகள், ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர வாக்காளர்களைத் தூண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா ஊடகவியலாளர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “இதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், 2029-ல் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக வருவார், அதை யாராலும் தடுக்க முடியாது” என அடித்துக் கூறியுள்ளார்.
தனக்கு தனிப்பட்ட முறையில் நாமல் ஆட்சிக்கு வருவதில் விருப்பமில்லை என்றாலும், நாட்டின் தற்போதைய நிலைமையைப் பார்க்கும்போது மக்கள் மீண்டும் ராஜபக்சக்களிடமே அதிகாரத்தை ஒப்படைப்பார்கள் என எதார்த்தத்தை உடைத்துள்ளார்.
மேலும், நாமல் ராஜபக்சவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேவையில்லை, அவர் நேரடியாக ஜனாதிபதியாகிவிடுவார் என்றும், அந்த நேரத்தில் தான் அரசியலில் இருக்க மாட்டேன், ஆனால் தான் சொன்னது நடக்கும் என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை கடுமையாக விமர்சித்த அர்ச்சுனா எம்.பி, வலிமையான எதிர்க்கட்சித் தலைவர் எப்போதும் வெளிப்படையாகப் பேச வேண்டும் என்றார்.
“சஜித்திடம் உள்ள பிரச்சினை என்னவென்றால் அவர் மிகவும் மென்மையானவர். நீங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும்போது பூங்கொத்துகளை வீச முடியாது, செங்கற்களைத் தான் வீச வேண்டும்” எனச் சாடினார்.
சாமர சம்பத்தின் பேச்சுத்திறனைப் பாராட்டிய அவர், தலைமைத்துவப் பண்பு அவரிடம் இல்லை என்றார்.
இறுதியாக, தமிழக நடிகர் விஜய் ஜோசப்பின் அரசியல் எழுச்சியைத் தான் முன்பே கணித்தபோது தன்னை ‘பைத்தியக்காரன்’ எனப் பலர் நிராகரித்ததாகவும், ஆனால் விஜய் பின்னர் தேர்தல் வெற்றியை அடைந்து சாதித்ததைப்போல, நாமலின் இந்த வெற்றியும் நிஜமாகும் எனத் தனது பேட்டியை நிறைவு செய்தார்.




